Friday 15 March 2013


இன்று - மார்ச் 15 : உலக உறக்க தினம். இதையொட்டிய சிறப்புப் பகிர்வு...

தூக்கத்தை அறிய ஒரு தளம்!

தினமும் தூங்குகிறோம். விடுமுறை என்றால், இன்னும் கூடுதல் நேரம் தூங்கி மகிழ்கிறோம். தூங்குவது என்பது ஆனந்தமான விஷயம்தான். ஆனால், நாம் ஏன் தூங்கிறோம்? தூக்கம் நமக்கு ஏன் அவசியம்?
...Continue Reading
இன்று - மார்ச் 15 : உலக உறக்க தினம். இதையொட்டிய சிறப்புப் பகிர்வு...

தூக்கத்தை அறிய ஒரு தளம்!

தினமும் தூங்குகிறோம். விடுமுறை என்றால், இன்னும் கூடுதல் நேரம் தூங்கி மகிழ்கிறோம். தூங்குவது என்பது ஆனந்தமான விஷயம்தான். ஆனால், நாம் ஏன் தூங்கிறோம்? தூக்கம் நமக்கு ஏன் அவசியம்?

இந்தக் கேள்விகளுக்கு பதில் தெரிய 'ஸ்லீப் ஃபார் கிட்ஸ்’ வலைத்தளம் பக்கம் போய்ப் பார்க்கலாம்.

'சின்னப் பூச்சி முதல் பெரிய திமிங்கிலம் வரை எல்லா உயிரினங்களும் தூங்குகின்றன. ஒரு சில விலங்குகள் தினமும் 20 மணி நேரம்கூட தூங்குகின்றன. நாம் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க தூக்கம் அவசியம்!’

இந்த அறிமுகக் குறிப்புகளோடு, 'தூக்கம் பற்றி அறிந்துகொள்ள வாருங்கள்’ என்று அழைப்பு விடுக்கும் இந்தத் தளம், தூக்கம் பற்றி வரிசையாகக் கேள்விகளைக் கேட்டு, அதற்கான பதில்களையும் தருகிறது.

'நாம் ஏன் தூங்கிறோம்?’

படித்ததை நினைவில் வைத்துக்கொள்ளவும், பாடத்தில் கவனம் செலுத்தவும், பிரச்னைகளுக்குத் தீர்வு கண்டு புதியவை பற்றி யோசிக்கவும், மூளைக்கு ஓய்வு தேவை என்பதாலும், தசைகளும் எலும்புகளும் வளரவும், அவற்றின் காயங்கள் ஆறவும், உடல் ஆரோக்கியத்தோடு இருந்து உடல்நலக் குறைவை எதிர்கொள்ளவும், உடலுக்கு ஓய்வு தேவை என்பதாலும் தூங்குகிறோம் என்று இந்தக் கேள்விக்கு பாயின்ட் பாயின்ட்டாகப் பதில் அளிக்கிறது.

அடுத்த கேள்வி, 'தூக்கத்தின்போது என்ன நடக்கிறது?’

முதலில் தூக்கத்தின் சுழற்சியைப் புரிந்துகொள்ள வேண்டும். ஆம், தூக்கம் என்பது   ஐந்து கட்டங்களைக் கொண்டது. ஒவ்வொரு கட்டமும் 90 நிமிடங்கள்கொண்டது. முதல் இரண்டு கட்டங்களில் தூக்கம் வந்தாலும், ஆழமான தூக்கமாக அது இருப்பது இல்லை. மூன்றாவது மற்றும் நான்காவது கட்டங்களில் ஆழமான தூக்கத்தில் ஆழ்ந்து விடுகிறோம். இதயத் துடிப்பும் சுவாசமும் சீராகி, உடலும் ஓய்வில் ஆழ்கிறது. ஐந்தாவது கட்டத்தில் மூளை விழித்துக்கொள்ள, கனவுகள் வருகின்றன.

இந்தச் சுழற்சியானது ஒவ்வொரு முறை தூங்கும் போதும் ஐந்து அல்லது ஆறு முறை மீண்டும் மீண்டும் நிகழ்கின்றன.

'எல்லாம் சரி, நாம் ஏன் இரவில் தூங்கிறோம்?’

இந்தக் கேள்விக்கும் இங்கே பதில் இருக்கிறது. ஒளிதான் எப்போது தூங்க வேண்டும், எப்போது விழித்து இருக்க வேண்டும் என்று நமக்கு உணர்த்து கிறது. காலையில் சூரிய ஒளியில் விழிக்க வேண்டும் என்பதை மூளைக்கு உணர்த்திவிடுகிறது. பின்னர் பகல் மாறி இரவு வரும்போது, மூளையில் மெலாடோனின் என்னும் ரசாயனம் சுரந்து, கண்களைத் தூக்கம் தழுவச்செய்கிறது.

சிறுவர்களைப் பொறுத்தவரை வயதுக்கு ஏற்றபடி சராசரியாக 10 மணி நேரம் தூக்கம் தேவை. இரவில் மட்டும் இல்லாமல் பள்ளி முடிந்து வந்த பிறகும் ஓரிரு மணி நேரம் தூங்கவேண்டும். அப்போதுதான் பள்ளியில் பாடத்தில் கவனம் செலுத்த முடியும். ஆரோக்கியமாக இருக்க முடியும். புதிதாக யோசிக்கவும் முடியும்.

இப்படித் தூக்கத்தின் அவசியத்தைச் சொல்லும் இந்தத் தளம், நீங்கள் சரியாகத் தூங்குகிறீர்களா என்று அறிந்துகொள்வதற்காக, தூக்கத்துக்கான டைரியை உருவாக்கிக்கொள்ளவும் உதவுகிறது. தூக்கத்தைக் கணக்கிடுவதற்கான கால்குலேட்டரும் கொடுக்கப்பட்டு உள்ளது. நன்றாகத் தூங்குவதற்கான வழிகளும் கொடுக்கப்பட்டு உள்ளன. தூங்க முடியாமல் தவிப்பவர்களுக்கு ஆலோசனைகளும் உண்டு.

கனவுகள் இல்லாமல் தூக்கம் உண்டா என்ன? கனவுகள் பற்றிய விளக்கமும் தனியே கொடுக்கப்பட்டு உள்ளது. தூக்கம் பற்றித் தெரிந்துகொள்ள உதவும் இந்தத் தளத்தில், தூக்கம் தொடர்பான புதிர்களும் விளையாட்டுகளும் இருக்கின்றன.

ஆக, தூக்கத்தை நன்றாகப் புரிந்துகொண்டு புத்துணர்வோடு இருப்பதற்கு, நீங்கள் நாடவேண்டிய தளம்: http://www.sleepforkids.org 

- சைபர்சிம்மன்

(சுட்டி விகடன் - நெட்டிஸம் தொடரில் இருந்து.)

No comments:

Post a Comment